சன.22,2011. சீனப் புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தாய்வான்
தலைநகர் தாய்பெய்யில், மக்கள் நிஜப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும்,
அவற்றுக்குப் பதிலாக பட்டாசு சத்த ஒலிப்பதிவை அவர்கள் ஒலிக்கச் செய்துகொள்ளலாம் என்றும்
அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் திருஷ்டி கழியும், துரதிருஷ்டம்
விலகும் என்று நம்பும் சீனர்கள் தங்களது புத்தாண்டை பட்டாசு கொளுத்தி வரவேற்பதென்பது
அவர்களின் நூற்றாண்டுகள் காலப் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
எனினும், ஹாங்காங்,
மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் சீனச் சமூகங்களில் பட்டாசு வெடிப்பதற்கு
தடை கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தாய்வானில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி இருந்து
வருகிறது.
சந்திரன் அடிப்படையிலான தமது புத்தாண்டை சீனர்கள் இரண்டு வார காலம்
கொண்டாடி வருகின்றனர்.
தவிர பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் அதிகமாக மாசுபடுவதைத்
தவிர்க்கும் விதமாக, பட்டாசு சத்தம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகளை மக்கள் இலவசமாகப்
பெறலாம் அல்லது அரசு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு தங்களுடைய குடும்ப
விழாக்கள், வர்ததக விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் அந்த ஒலிப்பதிவை அவர்கள் ஒலிக்கச்
செய்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.