2011-01-18 14:23:57

கேரளாவின் சபரிமலை விபத்து குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் கேரள ஆயர்கள்.


சனவரி18, 2011. கேரளாவில் சபரிமலை பக்தர்களுக்கு நடந்த விபத்து மற்றும் நெரிசலில் 102 பேர் வரை உயிரிழந்துள்ளது குறித்து தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளனர் கேரள கத்தோலிக்க ஆயர்கள்.

இம்மாதம் 14ந்தேதி இடம்பெற்ற இந்த அசம்பாவித சம்பவம் குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறினார் கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஆண்ட்ரூஸ் தழத்.

இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற தன் கருத்தை வெளியிட்ட பேராயர், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து இத்தகைய விபத்துக்கள் மேலும் நேரா வண்ணம் தடுக்க வேண்டிய வழிகள் குறித்து ஆராய வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமையாகிறது என்றார்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கென கேரளாவின் அனைத்துக் கோவில்களிலும் இஞ்ஞாயிறு திருப்பலியில் செபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.