2011-01-17 15:26:28

உலகில் அண்மை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டோருடன் திருத்தந்தையின் ஒருமைப்பாடு.


சன 17, 2011.  மேலும், வரும் மே மாதம் முதல் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுபெற்றவராக அறிவிக்கப்பட உள்ளது மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி என ஞாயிறு மூவேளை ஜெபத்திற்குப் பின் எடுத்துரைத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு ஞாயிறுக்கு பின் வரும் ஞாயிறு, இறை இரக்கத்தின் ஞாயிறாக அத்திருத்தந்தையாலேயே அறிவிக்கப்பட்டிருக்க, அதற்கு முந்தைய நாளில் அவர் உயிரிழந்ததை குறிப்பிட்ட பாபிறை 16ம் பெனடிக்ட், அந்த இறை இரக்கத்தின் ஞாயிறான மேமாதம் முதல் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுப் பெற்றவராக அறிவிக்கப்பட உள்ளதன் பொருத்தத்தை எடுத்தியம்பினார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலை அறிந்தவர்கள் மற்றும் அவரை அன்பு கூர்ந்தவர்கள் இந்நிகழ்வால் மகிழாமல் இருக்கமுடியாது என மேலும் கூறினார் பாப்பிறை.

ஆஸ்திரேலியா, இலங்கை, பிரேசில் மற்றும் பிலிப்பீன்ஸில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களையும் இம்மூவேளை செப வேளையில் நினைவுகூர்வதாகவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

இறந்தவர்களுக்கானத் தன் செபங்களுக்கு உறுதி கூறிய பாப்பிறை, வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளை இழந்து தவிக்கும்  மக்களுக்கானப் பலத்தையும், உதவிப்பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கான ஆதரவையும் இறைவன் வழங்குவாராக என வேண்டினார்.








All the contents on this site are copyrighted ©.