சவுதி அரேபியாவில் தங்குமிடமின்றி வாழும் இந்தோனேசியத் தொழிலாளர்களுக்கு தலத் திருச்சபை
உதவிகள்
சன.13,2011. சவுதி அரேபியாவில் பணிசெய்வதற்கு இந்தோனேசியாவிலிருந்து சென்றுள்ள 200க்கும்
அதிகமானோர் தங்குமிடமின்றி பாலத்தின் கீழ் வாழும் அவல நிலையைப் போக்க ஜகார்தாவில் உள்ள
அரசுசாரா அமைப்புக்களுடன் சேர்ந்து அந்நாட்டுத் தலத் திருச்சபை உதவிகள் செய்வதற்கு முன்
வந்துள்ளது. இந்தோனேசியாவின் பல வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் நிதி திரட்ட
ஆரம்பித்துள்ள இக்குழுவினர், 1,90,000 டாலர்கள் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளனர். இவ்வெள்ளிக்கிழமை
இஸ்லாமியத் தொழுகைக் கூடங்கள் அருகிலும், வருகிற ஞாயிறன்று கிறிஸ்தவக் கோவில்கள் அருகிலும்
நிதி திரட்டும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து சென்று பணி செய்யும்
இவர்களை மீட்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் உள்ளதென்றும் இஸ்லாமியர், கிறிஸ்தவர்
என்று வேறுபாடுகள் இன்றி துன்புறும் 200 தொழிலாளர்களுக்கும் உதவிகள் செய்வதே தங்கள் நோக்கம்
என்றும் இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் Anis Hidayah கூறினார்.