2011-01-11 15:22:17

மேற்கு வங்க வன்முறைகள் குறித்து கவலையை வெளியிடுகிறது தலத்திருச்சபை.


ஜன 11, 2011. மேற்கு வங்கத்தில் 7பேரின் மரணத்திற்கும் 17 பேரின் காயத்திற்கும் காரணமான அரசியல் வன்முறைகள் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அம்மாநில தலத்திருச்சபைத் தலைவர்கள்.

ஆயுதங்களைக் கைகொள்ளவேண்டும் என்ற கம்யூனிசவாதிகளின் அழைப்பை எதிர்த்து சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிளர்ச்சி செய்ததையொட்டி எழுந்த வன்முறைகள் பற்றி கவலையை வெளியிட்ட கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் சமூகப்பணி மையத்தின் இயக்குனர் குரு ரெஜினால்டு ஃபெர்னாண்டஸ், தேர்தலுக்கு முன்னான இக்காலத்தில் கம்யூனிசவாதிகள் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கண்டனத்தையும் தெரிவித்தார்.

மாநிலத்தின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள தலத்திருச்சபை, பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார் அவர். அநீதியாலும் அரசியல் வன்முறையாலும் பாதிக்கப்படும் மக்களோடு கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளது மேற்கு வங்க தலத்திருச்சபை.








All the contents on this site are copyrighted ©.