வியட்நாமில் சமய சுதந்திரம் மதிக்கப்படும், கர்தினால் ஐவன் டயஸ் நம்பிக்கை
சன.06,2011. வியட்நாம் கம்யூனிச நாட்டில் சமய சுதந்திரம் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையைத்
தெரிவித்தார் விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ்.
திருத்தந்தையின்
பிரதிநிதியாக வியட்நாம் திருச்சபையின் ஜூபிலி ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ளச் சென்றுள்ள கர்தினால் டயஸ், வியட்நாம் லா வாங் அன்னைமரி தேசியத் திருத்தலத்தில்
இப்புதனன்று திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
இத்திருப்பலியில்
அந்நாட்டு உதவிப் பிரதமர் நுகுயென் தியன் நான், மாநில அரசு அதிகாரிகள், 60, கர்தினால்கள்
மற்றும் ஆயர்கள், ஆயிரம் குருக்கள், இன்னும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளும்
கலந்து கொண்டனர்.
வியட்நாமில் சமய சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும்
என்றும், அனைத்து உள்ளூர் மத நிறுவனங்களும் விசுவாசிகளும் தங்களது விசுவாசத்தை வெளிப்படையாக
அறிவிக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் சாதகமான சூழலைப் பெறுவார்கள் என்றும் கர்தினால்
டயஸ் கூறினார்.
கத்தோலிக்கத் திருச்சபை எந்தவிதமானச் சிறப்புச் சலுகைகளையும் கேட்கவில்லை.
மாறாக, அது தனது பணிக்கான அடிப்படைச் சுதந்திரத்தைக் கேட்கிறது என்றும் இந்தியரான கர்தினால்
டயஸ் கூறினார்.