மத்திய பிரதேசத்தில் கைதிகளுக்குத் திறந்தவெளிச் சிறை
சன.04,2011. எதிர்பாராத விதமாகக் குற்றங்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்லும் கைதிகளும்
மனிதர்கள்தான், இவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய
பிரதேச அரசு முதல்முறையாகத் திறந்த வெளிச் சிறையை அமைத்துள்ளது.
ஔஷங்கபாத் என்ற
இடத்தில் 17 ஏக்கர் நிலத்தில் 3.26 கோடி ரூபாய்ச் செலவில் இந்தச் சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 25 வீடுகள் அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கைதிகள் தங்கள் குடும்பத்துடன் அந்த
வீடுகளில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளின் குழந்தைகளுக்குக் கல்வியும்
கைதிகளுக்குக் கைத்தொழிற் பயிற்சியும் தரப்படுவதாக சிறைத்துறை காவல்துறை அதிகாரி உஷா
ராஜ் தெரிவித்தார்.
கைதிகளுக்காகத் தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கவும் மாநில
அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்