அனைத்துலக கத்தோலிக்க இளையோர் அருங்கொடை இயக்கத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட
கர்தினால் ஐவன் டயஸ்
டிச.29, 2010. இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகள், அவர் வாழ்வில் கடைபிடித்த கட்டுப்பாடு,
அவர்மீது நாம் கொள்ளும் பக்தி இவைகள் மூலம் கிறிஸ்துவை இளையோர் பின்பற்றுமாறு வத்திக்கான்
அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார். Jesus Youth Movement (JY) என்ற அனைத்துலக கத்தோலிக்க
இளையோர் அருங்கொடை இயக்கத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளை இச்செவ்வாய் மாலை கேரளாவின்
கொச்சியில் துவக்கிவைத்து உரையாற்றியபோது, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர்
கர்தினால் ஐவன் டயஸ் இவ்வாறு கூறினார். மாசில்லாக் குழந்தைகளின் திருநாளான டிசம்பர்
28 இச்செவ்வாய்க் கிழமையன்று இந்த மாநாடு துவக்கப்பட்டுள்ளது நம் அனைவரையும் மாசின்றி
வாழ அழைப்பு விடுக்கும் ஒரு செய்தியாக அமைகிறது என்று கர்தினால் டயஸ் மேலும் கூறினார். கிறிஸ்துவுக்குச்
சான்று பகரும் இளையோர் தங்கள் வார்த்தைகளாலும், வியர்வையாலும் சான்று பகரவும், தேவைப்பட்டால்,
தங்கள் இரத்தத்தால் சான்று பகரவும் கர்தினால் டயஸ் அழைப்பு விடுத்தார்.ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா,
பங்களாதேஷ், கம்போடியா, ஜெர்மனி, மலேசியா, பாரசீக வளைகுடா நாடுகள், இலங்கை, சிங்கப்பூர்
உள்ளிட்ட, 29 நாடுகளிலிருந்து வந்திருக்கும் 20,000க்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொள்ளும்
இந்த மாநாடு புத்தாண்டு நாளான சனவரி முதல் தேதியன்று நிறைவுபெறும்.