வடக்கு வியட்நாமில் 100 வயதுடைய ஒருவர் கிறிஸ்மஸ் திருப்பலியில் திருமுழுக்கு பெறுகிறார்
டிச.23, 2010. வடக்கு வியட்நாமில் 100 வயதுடைய ஒருவர் கிறிஸ்மஸ் திருப்பலியில் திருமுழுக்கு
பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் உள்ள Pa Co என்ற பழங்குடி இனத்தைச்
சேர்ந்த Ho Tuoc என்பவர் 1910ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்தவர். வியட்நாமில் மறைபரப்புப்
பணி பெரிதும் தடை செய்யப்பட்டுள்ளதால், Ho Tuoc கிறிஸ்துவைப் பற்றி அறியாமல் வாழ்ந்து
வந்தவர்.
கடந்த ஆண்டு திருஇதயச் சபையைச் சார்ந்த அருள்தந்தை Joseph Duong Bao
Tinhம் இரு அருள் சகோதரிகளும் Ho Tuoc இருந்த கிராமத்திற்கு வியாபாரிகள் போல் மாறுவேடம்
அணிந்து வந்து, கிறிஸ்மஸ் பரிசுகளையும், குழந்தை இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாவின் படத்தையும்
கொடுத்தனர்.
அன்றிலிருந்து Ho Tuoc கிறிஸ்துவைப் பற்றி அறிய ஆவல் கொண்டதாகவும்,
கடந்த ஓராண்டு மேற்கொள்ளப்பட்ட மறைகல்வியின் பயனாக இவ்வாண்டு கிறிஸ்மஸ் நாளன்று அவருக்குத்
திருமுழுக்கு வழங்கப்படும் என்றும் அருள்தந்தை Tinh கூறினார்.
Ho Tuocன் மனைவி
மற்றும் நான்கு குழந்தைகளுக்கும் தற்போது மறைகல்வி வழங்கப்படுகிறதென்றும், அவர்கள் அடுத்த
ஆண்டு கிறிஸ்துவின் உயிர்ப்புத் திருநாளன்று திருமுழுக்கு பெறுவர் என்றும் அருள்தந்தை
Tinh மேலும் கூறினார்.