பெங்களூர் மரியியல் நிறுவனத்துக்கு திருத்தந்தை விருது
டிச.17,2010. அன்னைமரியா குறித்த கல்வியையும் ஆய்வுகளையும் நடத்தி வரும் இந்தியாவின்
பெங்களூரில் இயங்கும் ஒரு மரியியல் நிறுவனத்துக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்
திருத்தந்தை. உரோமையிலுள்ள பாப்பிறை கல்வி நிறுவனத்தில் இவ்வியாழன் மாலை நடந்த 15வது
கூட்டத்தில் இவ்விருது வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கெனத் திருத்தந்தை வழங்கிய
செய்தியில் இவ்விருது அறிவிக்கப்பட்டது. இச்செய்தியைத் திருப்பீடச் செயலர் கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனே வாசித்தார். இந்த பெங்களூர் மரியியல் நிறுவனத்தின் இயக்குனரான
அருள்திரு குழந்தைசாமி ராயர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்விருதைப் பெற்றார். இவர்
தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மரியியல் நிறுவனத்தோடு, போர்த்துக்கல் நாட்டு
பேராசிரியர் லூயிஸ் ஆல்பெர்த்தோ எஸ்டீவ்ஸ் தோஸ் சாந்தோஸ் கசிமீரோ என்பவருக்கும் விருது
வழங்கப்பட்டுள்ளது. இவர், “16ம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய ஓவியங்களில் மங்களவார்த்தை
நிகழ்ச்சி” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்.