காசநோயைக் கண்டுபிடிக்க உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ள புதிய சோதனை முறை
டிச.09, 2010. காசநோயைக் கண்டுபிடிக்கக் கூடிய ஒரு விரைவான சோதனை முறையை ஐ.நா.வின் WHO
என்ற உலக நலவாழ்வு நிறுவனம் இப்புதனன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரை உலகின் பல்வேறு
நாடுகளில் காசநோயைச் சரிவர கண்டுபிடிக்கும் சோதனைகள் மூன்று மாதங்களாக நீடிக்கும் சூழலில்,
இப்புதிய முறை இந்நோயை 100 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் திறமை பெற்றதென்று WHO அறிவித்துள்ளது. காசநோய்
உள்ளவரின் எச்சில், கபம் இவைகளைக் கொண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள சோதனைகள்
ஒரு நூற்றாண்டுக்கும் பழமையானவை. உலக நல நிறுவனம் அறிவித்துள்ள இப்புதிய முறை DNA தொழில்
நுட்பத்தின் அடிப்படையில் எழுந்துள்ளது என்றும் இது NAAT என்று அழைக்கப்படுவதாகவும் செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது. காசநோயினால் 2009ம் ஆண்டு உலகில் 17 லட்சம் மக்கள் இறந்துள்ளனர்,
மற்றும் 94 லட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு
மேலும் கூறுகிறது.