பாக்தாத் மறைசாட்சிகள் நினைவாக டிசம்பர் 9 ம் தேதி நோன்பு கடைபிடிக்க அழைப்பு
டிச.04,2010. கடந்த அக்டோபரில் பாக்தாத் சிரிய-ஆர்த்தடாக்ஸ் பேராலயத்தில் கொல்லப்பட்ட
கிறிஸ்தவர்களை நினைவுகூரும் விதமாக இம்மாதம் 9ம் தேதி நோன்பு மற்றும் செப நாளைக் கடைபிடிக்குமாறு
அழைப்பு விடுத்துள்ளது ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ சபைகள் அவை.
வட ஈராக்கிலுள்ள எர்பிலில்
கூட்டம் நடத்திய அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து
தாக்கப்பட்டு வருவது குறித்து விவாதித்ததோடு, மறைசாட்சிகளின் நினைவாக ஒருநாள் நோன்பு
அனுசரிக்கவும் கேட்டுக் கொண்டனர்.
வட ஈராக்கில் வீடுகளும் வேலையும் பிள்ளைகளுக்கு
கல்வியும் இல்லாமல் கஷ்டப்படும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பகளுக்கும்
உதவுமாறு குர்த் அரசுக்கும் அத்தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த அக்டோபர்
31ம் தேதி பாக்தாத் சகாய அன்னை பேராலயத்தில் அல் கெய்தா அமைப்போடு தொடர்புடைய பயங்கரவாதிகள்
நடத்திய தாக்குதலில் இரண்டு குருக்கள் உட்பட 46 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். 70க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.