மகாராஷ்ட்ராவில் பஞ்சு உற்பத்தி செய்யும் விவசாயிகள் சார்பில் தலத் திருச்சபை போராட்டம்
டிச.03, 2010. இதற்கிடையே, மகாராஷ்ட்ராவில் பஞ்சின் கொள்முதல் விலையை உயர்த்த மறுத்துள்ள
அம்மாநில அரசுக்கு எதிராக மேற்கிந்தியத் தலத் திருச்சபை கடந்த மூன்று நாட்களாகப் பல்வேறு
போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. 100 கிலோ பஞ்சின் விலையை 3000 ரூபாயிலிருந்து
4200 ரூபாய்க்கு உயர்த்துமாறு, கடந்த ஞாயிறன்று பஞ்சு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகாராஷ்டிரா
அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத் பவாரை சந்தித்து அளித்த விண்ணப்பங்களை அரசு கருத்தில்
கொள்ளவில்லை என்பதால், திங்கள் முதல் பஞ்சு விவசாயிகள் ஆரம்பித்த போராட்டத்திற்கு மேற்கிந்தியத்
தலத் திருச்சபையும் தன் ஆதரவை அளித்து வருகிறது. கடன் தொல்லைகளில் மூழ்கி இருக்கும்
விவசாயிகளின் வேண்டுகோள்கள் மிகவும் நியாயமானவைகளாய் இருப்பதால், தலத் திருச்சபை அவர்களுக்கு
ஆதரவு அளிப்பதாக விவசாயிகளின் மத்தியில் பணி புரியும் அருள்தந்தை ஜாலி புதேன்புரா கூறினார்.அரசின்
கண்மூடித் தனமான போக்கு இன்னும் பல நூறு விவசாயிகளைத் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் என்று
இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் கிஷோர் திவாரி கூறினார்.