2010-11-26 14:58:16

கொரிய நாடுகளிடையே நிலவி வரும் போர்ச்சூழலைத் தீர்க்க அனைத்துலக நாடுகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - தென் கொரிய ஆயர் வேண்டுகோள்


நவ.26, 2010. வட, தென் கொரிய நாடுகளிடையே நிலவி வரும் பதட்டமான சூழலைக் குறைக்க, அனைத்துலக நாடுகளும், சிறப்பாக சீனாவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று தென் கொரிய ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் Peter Kang U-il வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போரும் பூசல்களும் உலகில் அழிவுகளை மட்டுமே கொண்டுவர முடியுமே தவிர, நிலையானத் தீர்வுகளைத் தராது என்றும், போரில் அழிவது எளிய மக்களின் உயிர்களே என்றும் ஆயர் Kang கூறினார்.
கொரிய மக்களுக்கென திருத்தந்தையின் சிறப்பான வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்ட ஆயர் Kong, அனைத்துலகத் திருச்சபையின் செபங்களையும் கேட்டுக் கொண்டார். உலக அமைதியானது அரசியல் முயற்சிகளால் மட்டுமே உருவாக்கப்பட முடியாது என்றும் கடவுளின் உதவி இதற்குத் தேவை என்றும் ஆயர் மேலும் வலியுறுத்தினார்.இதற்கிடையே, வருகிற ஞாயிறன்று தென் கொரிய மற்றும் அமெரிக்கக் கடற்படையினர் மேற்கொள்ளவிருக்கும் கடற்படை பயிற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலை மேலும் தீவிரப்படுத்தி வருகிறதென செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.