2010-11-24 15:41:45

சீனாவில் ஆயர் திருநிலைப்பாடு குறித்து வத்திக்கான் கண்டனம்


நவ.24,2010. சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி ஆயர் ஒருவர் திருநிலைப்படுத்தப்பட்டிருப்பது குறித்தத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

இம்மாதம் 20ம் தேதி சீனாவின் ஹெபெய் மாநிலத்தின் செங்டெயில் சீன அரசின் ஆதரவுடன் இயங்கும் கத்தோலிக்கத் திருச்சபையின் குரு ஜோசப் குவோ ஜின்காய் (Joseph Guo Jincai) ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து இப்புதனன்று அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பத்தரிகை அலுவலகம், இந்நிகழ்வு குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகக் கூறியது.

இந்த நிகழ்வானது, திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையேயான உரையாடலுக்கு இடையூறாக இருக்கும் “வேதனைநிறைந்த காயம்” என்று குறிப்பிட்டுள்ள திருப்பீடம், திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் பல்வேறு கத்தோலிக்க ஆயர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறியது.

ஆயர் திருநிலைப்பாட்டைக் கொடுக்கவும் அதில் கலந்து கொள்ளவும் அண்மை நாட்களில் பல ஆயர்கள் கட்டாயப்படுத்தப்படுவதன் மூலம் அவர்களின் சமய சுதந்திரம் வற்புறுத்தல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாகி வருவதாகவும் திருப்பீடம் கூறியது.

சீன அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கட்டுப்பாடுகள், சமய மற்றும் மனச்சான்றின் சுதந்திரத்தைக் கடுமையாக மீறுவதாக இருக்கின்றது என்றுரைக்கும் திருப்பீடம், இதில் ஈடுபட்டுள்ள ஆயர்கள் ஒவ்வொருவரின் நிலைமை குறித்து விசாரணை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.