2010-11-19 16:05:39

திருச்சபைப் பணியாளர்கள் நோயில்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தப் பேராயர் அமாத்தோ வலியுறுத்தல்


நவ.19,2010. நோயாளிகளுக்கு மேய்ப்புப்பணி செய்யும் திருச்சபைப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு நோயில்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ கேட்டுக் கொண்டார்.

வத்திக்கானில் திருப்பீட நலவாழ்வுத்துறை நடத்திய இரண்டு நாள் சர்வதேச கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அமாத்தோ, நோயில்பூசுதல் அருளடையாளத்தின் சிறப்பையும் விளக்கினார்.

இவ்வருளடையாளம், நோயாளியைக் கிறிஸ்துவின் திருப்பாடுகளோடு மிக ஆழமாக ஒன்றிணைத்து அவருக்குச் சிறப்பு அருளையும், ஆறுதல், அமைதி, தைரியம் ஆகியவற்றையும் வழங்குகின்றது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் நோயாளி ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறமுடியாமல் இருக்கும் நிலையிலும் அவரது பாவங்களுக்கு மன்னிப்பையும் நோயில்பூசுதல் அருளடையாளம் வழங்குகின்றது என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

இவ்வருளடையாளத்தால், கடவுள் விரும்பினால், நோயாளிக் குணமடையவும் வாய்ப்பிருக்கின்றது என்றும், இயேசு கிறிஸ்துவுக்குக் குணப்படுத்துதல் என்பது நோயாளியின் இதயத்தில் அளவற்ற அருளுடன் அவர் நுழையும் புனிதக் கதவு போன்றது என்றும் பேராயர் கூறினார்.

இந்த 25வது அனைத்துலக கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.








All the contents on this site are copyrighted ©.