திருத்தந்தையின் ஒப்புதல் இன்றி சீன அரசு ஒருவரை ஆயராகத் திருநிலைப்படுத்த மேற்கொண்டுள்ள
முயற்சிகள் வத்திக்கானில் கவலை அளித்துள்ளது
நவ.18, 2010. சீன அரசு தெரிவு செய்துள்ள ஒரு குருவை அந்நாட்டில் உள்ள ஆயர்கள் திருநிலைப்படுத்த
வேண்டுமென்று அவ்வரசு வற்புறுத்துவது குறித்து வத்திக்கான் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
வருகிற
இருபதாம் தேதி Joseph Guo Jincai என்ற குருவை Chengde என்ற மறைமாவட்டத்திற்கு, திருத்தந்தையின்
ஒப்புதல் இன்றி ஆயராகத் திருநிலைப்படுத்த சீன அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வத்திக்கானில்
கவலை அளித்துள்ளது.
அந்நாட்டில் திருத்தந்தை நியமித்துள்ள ஆயர்கள் இந்தத் திருநிலைப்பாட்டை
நடத்தித் தர வேண்டுமென்று வற்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்செய்திகள்
உண்மையானால், இவை திருப்பீடத்தின் அதிகாரத்தைப் பெரிதும் களங்கப்படுத்தும் ஒரு முயற்சி
என்று திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
இச்செய்திகளைக்
கேட்ட பின், திருப்பீடம் சீன அரசுடன் தொடர்பு கொண்டுள்ளதெனவும், வத்திக்கானுடன் நல்லுறவை
வளர்க்க விரும்பும் சீன அரசின் இச்செயல் குறித்து திருப்பீடம் முழு விளக்கம் கேட்டுள்ளதென்றும்
அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.