உலகில் உணவின் விலை இன்னும் அதிக அளவில் உயரும் - ஐ.நா.வின் அறிக்கை
நவ.18, 2010. உலகில் உணவின் விலை இன்னும் அதிக அளவில் உயரும் என்றும் ஒவ்வொரு நாடும்
இறக்குமதி செய்யும் உணவின் விலை இவ்வாண்டு நூறு கோடி டாலரைத் தாண்டும் என்றும் ஐ.நா.வின்
அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறையான FAOவின் அண்மைய
அறிக்கையின்படி, உலகின் பல ஏழை நாடுகள் இறக்குமதி செய்யும் உணவுக்கு 11 விழுக்காடு அதிகம்
விலை தர வேண்டுமென்றும், உணவு பற்றாக்குறை உள்ள நாடுகளில் இது 20 விழுக்காடு அளவு உயரும்
என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
உலகின் அரிசி உற்பத்தி மட்டுமே உயர்ந்து வருகிறதென்றும்,
பிற அடிப்படை உணவு தானியங்களின் உற்பத்தி அளவு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதென்றும் ஐ.நா.நிறுவனம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து தானியங்களின் உற்பத்தியைப் பெருக்குவதால் மட்டுமே
இந்த விலையுயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறும் ஐ.நா.நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளில்
உயராத அளவு சர்க்கரையின் விலை மிக அதிகம் உயர்ந்துள்ளது இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணம்
என்று இவ்வறிக்கையில் கூறியுள்ளது.