திருவழிபாட்டின்
இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு (நவம்பர்
28ம் தேதி) திருவருகைக் காலத்துடன் திருவழிபாட்டின் அடுத்த ஆண்டைத் ஆரம்பிக்கிறோம். சென்ற
ஆண்டு நவம்பர் 29ம் தேதி இந்த திருவழிபாட்டு ஆண்டை நாம் ஆரம்பித்த போது, நமக்குத் தரப்பட்ட
விவிலிய வாசகம் லூக்கா நற்செய்தி 21ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது. இன்று திருவழிபாட்டு
ஆண்டின் இறுதி ஞாயிறன்று மீண்டும் லூக்கா நற்செய்தி 21ம் பிரிவிலிருந்து வாசகம் தரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் பெரும்பாலான ஞாயிறு திருப்பலிகளில் லூக்கா நற்செய்தியின் அற்புதப்
பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
லூக்கா
நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும்
நற்செய்திகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி.
அந்த நல்ல செய்தி சில சமயங்களில் மனதில் பயத்தை, கலக்கத்தை உண்டாக்கும்... நல்லவை நடக்க
வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும் நல்ல செய்தி தானே. இந்தக்
கோணத்திலிருந்து இன்றைய நற்செய்தியை நாம் பார்க்க வேண்டும். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள
நற்செய்தி வாசகத்தில் 15 திருவசனங்கள் உள்ளன. அவற்றில் 13 திருவசனங்கள் அழிவைக் கூறுகின்றன.
இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்கம்... லூக்கா நற்செய்தி 21: 5-6 அக்காலத்தில்,
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப்
பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம்
வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்”
என்றார். இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இயேசுவுக்கு ஆனாலும்
இவ்வளவு வீரம் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். இஸ்ரயேல் மக்கள் மிகப் பெரிய திருத்தலமாகக்
கொண்டாடி வந்த எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்று கொண்டு, அந்தப் பேராலயம் கல்மேல்
கல் இராதபடி இடிந்து தரை மட்டமாகும் என்று கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு வீரம் வேண்டும்.
பின் வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப்
பேச முடிந்ததென்று இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம். ஆனால், அதே நேரம்,
தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை, அவர் நடந்து கொள்ளும் முறை இவைகளை வைத்து அவர்
வாழ்வு அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று சொல்லலாம், இல்லையா?
அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம்.
எருசலேம் கோவில், உலகம் இவை செல்லும் போக்கை இயேசு ஆழமாய் உணர்ந்து இன்றைய நற்செய்தியில்
சொல்லியிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். இயேசுவைப் பொறுத்தவரை, அவர் 12
வயதிலிருந்தே எருசலேம் ஆலயம் நடத்தப்படும் முறையைப் பார்த்து கவலைப்பட்டிருப்பார். அவரது
கவலை, ஆதங்கம் இவைகளை ஒரு சாட்டையாகப் பின்னி, ஒரு சில நாட்களுக்கு முன் அந்த ஆலயத்தை
அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம்
மீண்டும் மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு
வியாபார ரீதியில் செல்லும் இந்தக் கோவில் கட்டாயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில்
படும். இந்தக் கோவில் சேர்த்துள்ள செல்வமே இதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதைச்
சொல்லாமல் சொல்லும் வண்ணம் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம்.
முதல் இரு திருவசனங்களில்
கோவிலின் அழிவு பற்றி பேசும் இயேசு, அதன் பின் உலகில் நிகழப்போகும் அழிவுகளைப் பற்றி
13 திருவசனங்களில் கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், இயேசு
ஏதோ நாம் வாழும் இக்காலத்தில் வாழ்வது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள்
இவை:
கடவுளின் பெயரால்... உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால்... மக்களை
வழிமாறிப் போகச் செய்தல்; போர் முழக்கங்கள், குழப்பங்கள், நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து
எழுதல்; பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்; அச்சுறுத்தும் அடையாளங்கள்
வானில் தோன்றுதல்…
இவை அனைத்தும் நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி
நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில் கலங்காமல்
இருங்கள் என்றும் இயேசு உறுதி சொல்கிறார். இயற்கையில், பொது வாழ்வில், நடக்கும் இந்த
பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின்
வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயேசு. அங்கும் அவர் சொல்பவை அச்சத்தையும் குழப்பத்தையும்
ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.
நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச்
செல்லப்படுவீர்கள்; உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்; உங்களுக்கு
எதிராக சான்று பகர்வார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்; என்பெயரின் பொருட்டு
எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்…
இயேசு கூறிய இந்த அழிவுகள் ஈராக்கில் வாழும்
கிறிஸ்தவர்கள் சந்தித்து வரும் வன்முறைகளை, அண்மையில் பாக்தாத்தில் அக்டோபர் 31 ஞாயிறுத்
திருப்பலி நேரத்தில் நடந்த தாக்குதலை நினைவுப்படுத்துகிறது. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள்
தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க அவர்களுக்காகச் சிறப்பாக இன்று செபிப்போம்.
இயேசு
இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும் போது, இது என்ன நற்செய்தியா என்று
கூடக் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவுபடுத்துகிறேன். நற்செய்தி என்றால், இனிப்பான
செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை நமக்குச் சுட்டிக் காட்டும் மருத்துவரை எதிரி
என்றா நாம் கூறுகிறோம்? நாவுக்கு கசப்பான மருந்துகளைத் தரும் அவர் நமது நன்மைக்காகச்
செய்வதாக நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும் இந்த உலகத்தைப் பற்றிய கசப்பான உணமைகளைச்
சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு
மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும்
கூட்டம் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே! தொண்டர்களைத்
தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே
ஆபத்துக்கள் வரும் போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திசைத் திருப்பி, வெறியூட்டும்
பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளைத் தான் காட்டுவார்கள்,
இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி மாறுபட்ட வழி...
இத்தனைப் பிரச்சனைகளின்
மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும்
பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியின் 15 திருவசனங்களில் 14,15 என்ற இரண்டு திருவசனங்களில்
மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார் இயேசு. விசாரணைகளின் போது,
“என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள்
மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்;
உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.”(லூக்கா 21: 14-15) என்று கூறுகிறார் இயேசு. நற்செய்தியின் இறுதியிலும்
இயேசு அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். “நீங்கள் மன உறுதியோடு இருந்து
உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.” இயேசு கூறும் ‘உஙகள் வாழ்வு’ இவ்வுலக
வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு. சென்ற ஞாயிறு சிந்தனையின் போது, மறுவாழ்வைப் பற்றிப் பேசினோம்.
அப்போது சாவுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியரைப் பற்றிக் கூறினேன்.
அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலை கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற
இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்:
“உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு
முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும்
கனவுகளைத் துரத்த வேண்டாம். நீங்கள் எவ்வளவு தான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர்
இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும்.
மனித உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். மனித உறவு ஒவ்வொன்றும் ஏக்கம் தராது.
நிறைவைத் தரும்." என்றார்.
வாழ்வைச் சந்திக்க, அதிலும் முக்கியமாக, வாழ்வின் பிரச்சனைகளைச்
சந்திக்க, துயரங்களை, கவலைகளை, அழிவுகளைச் சந்திக்க நமக்குத் தேவையானவை பொருள், செல்வம்,
பதவிகள் அல்ல. மாறாக, நமது உறவுகள். இயேசு இந்த உலகில் வாழ்ந்த வாழ்க்கை பிரச்சனைகள்
நிறைந்த ஒரு வாழ்க்கை. அந்த வாழ்வில் அவருக்கு உறுதியைத் தந்தது, தந்தையாம் இறைவனுடன்
அவருக்கிருந்த உறவு. அந்த உறவில் இயேசு நம்பிக்கை இழந்திருந்தால், அவர் சந்தித்தப் பிரச்சனைகளில்
நொறுங்கிப் போயிருப்பார். தன் வாழ்வில் அவர் கண்ட அந்த உறவு அனுபவத்தைத் தன்னைப் பின்
பற்றுபவர்களுக்கும் அவர் கொடுக்கிறார். "நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் பேச வேண்டியவைகளை
நான் சொல்லித் தருவேன்." என்று அவர் வாக்குறுதி தருகிறார். பணம், புகழ் என்று அழியும்
சக்திகளுக்கு, உலகை அழிக்கும் சக்திகளுக்கு மத்தியில் மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச்
செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதெனும் நம்பிக்கையோடு
உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.