திருச்சபை மற்றும் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை
மீண்டும் கண்டுகொள்வது இன்றியமையாதது - திருத்தந்தை
நவ.11,2010. திருச்சபை மற்றும் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை
மீண்டும் கண்டுகொள்வது மனித சமுதாயத்துக்கு மீட்பை அறிவிப்பதற்கான உடனடித் தேவையாக அமைகின்றது
என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார். “Verbum Domini” அதாவது இறைவார்த்தை
பற்றி 2008ம் ஆண்டில் நடைபெற்ற 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பகிரப்பட்ட சிந்தனைகள்
மற்றும் பரிந்துரைகள் அடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்டின் அப்போஸ்தலிக்க ஏட்டில் இவ்வாறு
அவர் குறிப்பிட்டுள்ளார். “Verbum Domini” என்ற தலைப்பிடப்பட்ட இவ்வேட்டை, திருப்பீட
ஆயர் பேராயத் தலைவர் கர்தினால் மார்க் கெல்லெ Marc Quellet தலைமையிலான குழு, இவ்வியாழனன்று
நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது. ஏறக்குறைய 200 பக்கங்கள் கொண்ட இவ்வேட்டில், திருத்தந்தை,
திருமறைநூலை எப்பொழுதும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று உலகின் அனைத்து மேய்ப்பர்கள்,
இருபால் துறவிகள் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடவுள்
அடிக்கடி மேலோட்டமாக அல்லது அந்நியராகப் பார்க்கப்படும் ஓர் உலகில் இறைவன் வரலாற்றில்
பேசுகிறார் மற்றும் அவர் மனிதருக்குச் சாதகமாகவேச் செயல்படுகிறார் என்பதை நாம் ஆணித்தரமாக
எடுத்துரைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை அதில் வலியுறுத்தியுள்ளார்.