நமது வழிபாட்டு முயற்சிகள் சிறந்ததொரு கல்வியை வழங்கும் - திருத்தந்தை
நவ.10, 2010. நற்செய்தியின் படி வாழ்வை அமைத்துக் கொள்ள சிறந்ததொரு கல்வியை வழங்குவது
நமது வழிபாட்டு முயற்சிகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இவ்வியாழன்
வரை இத்தாலியின் அசிசி நகரில் நடைபெற்ற இத்தாலிய ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டத்திற்குத்
தன் செய்தியை அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். உரோமைய வழிபாட்டு நூலின் புதிய
இத்தாலிய மொழிபெயர்ப்பை இக்கூட்டத்தில் விவாதித்து வந்த ஆயர்களுக்குத் தன் செய்தியை அனுப்பிய
திருத்தந்தை, நமது வழிபாடுகள் மக்களை முழு மனதுடன் ஈடுபடுத்தும் வண்ணம் அமைவது அவர்கள்
வாழ்வுப் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.திருநற்கருணையைக்
கொண்டாடும் போது, அதன் மேன்மையையும் புனிதத்துவத்தையும் உணர்ந்து கொண்டாடுவது அவசியம்
என்று கூறிய திருத்தந்தை, நற்கருணை கொண்டாட்டங்கள் வாழ்விலும் நம்மைப் புனிதத்துவத்திற்கும்,
மேன்மைக்கும் அழைக்கிறது என்று கூறினார்.