2010-11-05 15:19:01

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 18வது மேய்ப்புப்பணித் திருப்பயணம்


நவ.05,2010. ஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா, பார்செலோனா ஆகிய இரு நகரங்களுக்கானத் தனது முதல் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை இச்சனிக்கிழமை காலை தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் முற்பகல் 11.30 மணிக்கு சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா சர்வதேச விமான நிலையம் சென்றடையும் திருத்தந்தை, விமான நிலைய வரவேற்பில் கலந்து கொண்ட பின்னர், சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா திருத்தலம் செல்வார்.

திருத்தூதர் புனித யாகப்பர் கல்லறைமீது கட்டப்பட்டுள்ள இத்திருத்தலத்தில் விசுவாசிகளை வாழ்த்தி உரை வழங்கும் திருத்தந்தை, மாலையில் அத்திருத்தல வளாகத்தில் ஜூபிலி ஆண்டு நிறைவுத் திருப்பலி நிகழ்த்துவார்.

இஞ்ஞாயிறு காலை பார்செலோனா திருக்குடும்பப் பேராலயத்தின் இசை அரங்கில் ஸ்பெயின் அரசர் ஹூவான் முதலாம் கார்லோசைச் சந்திப்பார். பின்னர் அப்பேராலயத்தை அர்ச்சித்து திருப்பலியும் நிகழ்த்துவார். அதனை ஒரு பசிலிக்காவெனவும் அறிவிப்பார்.

பின்னர் மாலையில், ‘கடவுளின் குழந்தை’ என்று பொருள்படும் Nino Dios என்ற குழந்தைகள் பராமரிப்பு அமைப்பு நிறுவவுள்ள ஒரு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.

பார்செலோனா விமான நிலையத்தில் அந்நகரத் தலைவரைச் சந்தித்த பின்னர் உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்த இரண்டு ஸ்பெயின் நகரங்களுக்கான இரண்டு நாள் திருப்பயணம் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 18வது வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைகின்றது.







All the contents on this site are copyrighted ©.