திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் உரையாடல்கள் அடங்கிய புத்தகம் இம்மாதம் வெளியாகவுள்ளது
நவ.04,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் உரையாடல்கள் அடங்கிய புத்தகம் ஒன்று இம்மாதம்
24ம் தேதி வெளியாகவுள்ளது. திருத்தந்தை தன் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில்
ஜூலை மாதம் தங்கியிருந்தபோது, அவரை அங்கு சந்தித்த ஜெர்மன் பத்திரிகை நிருபர் Peter Seewald
திருத்தந்தையைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டிகளின் தொகுப்பாக வெளி வரும் இந்நூலை இக்னேசியஸ்
அச்சகம் வெளியிடுகிறது. சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து அண்மைக் காலங்களில்
திருச்சபை சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை உட்பட, பல்வேறு விடயங்களில் திருத்தந்தை
தன் கருத்துக்களைத் தெளிவாக வெளியிட்டுள்ளார் என்று இப்புத்தகத்தைத் தொகுத்துள்ள Seewald
கூறினார். பாப்பிறையின் தவறாவரம், மூன்றாம் வத்திக்கான் பொது அமர்வுக்கான வாய்ப்புக்கள்,
இஸ்லாமியருடன் மேற்கொள்ளக்கூடிய உண்மையான உரையாடல்கள் என்று பல்வேறு விடயங்களுக்குத்
திருத்தந்தை இப்புத்தகத்தில் தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
கர்தினாலாக இருந்தபோது Peter Seewald அவரிடம் எடுத்த இரு பேட்டிகள் 1996, 2002 ஆகிய இரு
ஆண்டுகளில் புத்தகங்களாக வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது.