கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைய உலகத் தலைவர்கள் முயல வேண்டும் - பேராயர்
பிரான்சிஸ் சுல்லிக்காட்
நவ.03,2010. கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் களைய உலகத் தலைவர்கள்
முயல வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஞாயிறன்று பாக்தாத்தில்
சிரியரீதி கத்தோலிக்கப் பேராலயத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறித்து, ஐ.நா.வுக்கான வத்திக்கானின்
நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் திங்களன்று ஐ.நா.தலைமையகத்தில்
பேசுகையில் இவ்வாறு கூறினார். வத்திக்கானின் நிரந்தரப் பார்வையாளராக நியமனம் பெறுவதற்கு
முன் ஈராக்கில் பணி செய்த பேராயர் சுல்லிக்காட், அங்கு கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்குத்
தான் ஒரு நேரடி சாட்சி என்று தன் உரையில் எடுத்துக் கூறினார்.கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை
விடுத்து வேறு மதங்களுக்கு மாறுவதற்கு உலகின் பல நாடுகளிலும் பலவகைகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர்
என்று கூறிய பேராயர் சுல்லிக்காட், மதங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வண்ணம்
பகிரங்கமாகப் பேசி வருவோருக்கு எதிராக அரசுகள் இன்னும் தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.