தலித்துகளுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் கிறிஸ்தவ விழுமியங்களின்படி ஒரு
பாவம்
அக். 28, 2010 - தலித்துகளுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் அவமானம் தரும் ஒரு
செயல் என்றும், அது கிறிஸ்தவ விழுமியங்களின்படி பாவம் என்றும் இந்தியக் கிறிஸ்தவ சபைகளின்
ஒருங்கிணைந்த குழு கூறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளிலிருந்து இறையியல்
வல்லுனர்கள், சமுதாய ஆர்வலர்கள் என்று 80 பேர் அண்மையில் கலந்து கொண்ட நான்கு நாள் கூட்டத்தில்
இவ்வாறு கூறப்பட்டது. இந்தியாவில் நிலவி வரும் ஜாதி அமைப்புக்கள், அதன் விளைவாக தலித்துகளுக்கு
இழைக்கப்படும் அநீதிகள் இறைவனின் விருப்பத்திற்கு எதிரானவை என்றும் இந்த அநீத அமைப்புக்களைக்
களைவது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்றும் இக்கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.இந்தியாவின்
30 பல்வேறு கிறிஸ்துவ சபைகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைந்த
அமைப்பில் ஒரு கோடியே, முப்பது இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.