இந்தியாவில் அமைதியை வளர்க்கும் முயற்சிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும் - உயர்மட்டக்
கத்தோலிக்கக் குழு
அக். 28, 2010 - இந்தியாவில் வன்முறைகளைத் தூண்டி வரும் சக்திகளுக்கு எதிராக, அமைதியை
வளர்க்கும் முயற்சிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று இந்தியாவின் உயர்மட்டக்
கத்தோலிக்கக் குழு ஒன்று கூறியுள்ளது. இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களும் மும்பையில்
கூடிய இந்த உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் பேசிய மும்பை கர்தினால் Oswald Gracias,
இந்தியாவின் தற்போதைய சமுதாய அரசியல் நிலைகளை ஆராய்ந்து, நீண்ட கால தீர்வுகளைக் காணும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மைக் காலங்களில் இந்தியாவில்
மத நல்லிணக்கத்தை வளர்க்க உருவாகியுள்ள சில முயற்சிகளைக் குறிப்பிட்ட கர்தினால் Gracias,
இன்னும் சில பகுதிகளில் அமைதியை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக
வளர்ந்து வரும் வன்முறைகளும், Maoist குழுவினரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் இக்கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டன.இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை, இந்தியத் துறவியர் அவை, போது நிலையினர்
குழுக்கள் ஆகிய பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய இந்த உயர்மட்டக் குழுவின்
கூட்டம் இப்புதனன்று நிறைவடைந்தது.