அண்மையில் பத்திரிகையில் அந்தச் செய்தியை வாசித்த போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வாழ்க வருங்காலத் தலைமுறை என்று மனது வாழ்த்தியது. சென்னையில் அன்று அந்த வீட்டில் ஆதித்தியா
என்ற 13 வயது சிறுவனுக்குப் பிறந்த நாள். காலையில் சீக்கிரமே எழும்பி குளித்து விட்டு
புத்தாடை அணிந்தான். பின்னர் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியென எல்லாருக்கும் இனிப்பு
வழங்கி அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினான். பின்னர் முற்றத்தில் பாத்திரங்களைத்
தேய்த்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணிடம் சென்று இனிப்பு வழங்கி அவர் காலிலும் விழுந்து
வணங்கினான். இதை சற்றும் எதிர்பார்த்திராத அந்தப் பெண், இன்ப அதிர்ச்சியில், கைகளைக்கூட
கழுவ மறந்து அவனின் தலைமீது கை வைத்து, “நீ நல்லா இருப்பேப்பா” என ஆனந்தக் கண்ணீருடன்
ஆசீர்வாதம் வழங்கினார். ஏழை பணக்காரர், சொந்தம் அந்நியம் என்று வேற்றுமை பாராது நடந்து
கொண்ட ஆதித்தியாவின் நல்ல பண்பைப் பார்த்து அந்தக் குடும்பமே பெருமிதம் அடைந்தது. ஒழுக்கமே
உயர்வு.