AIDSநோய்க்கெதிரான இந்திய கத்தோலிக்க நல அமைப்பு CHAIன்
முயற்சிகள்
அக்.27, 2010 - AIDS நோயைத் தடுப்பதற்கும், அந்நோய் கண்டவர்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படாமல்
இருப்பதற்கும் CHAI என்று வழங்கப்படும் இந்திய கத்தோலிக்க நல அமைப்பு தன் முயற்சிகளைத்
தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் இவ்வமைப்பினர் Secunderbadல் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில்
இம்முடிவுகள் எடுக்கப்பட்டன. CHAI நடத்திய இந்தக் கூட்டத்தில் ஆயர்கள், குருக்கள், அருள்சகோதரிகள்,
மற்றும் சமூகநல ஆர்வலர்கள் உட்பட 550 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். AIDS
நோயைத் தடுப்பது குறித்த பல திட்டங்கள் இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இந்நோய் கண்டவர்கள்
சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர் என்றும், அவர்களுக்கு இறுதி ஊர்வல சடங்குகளும்
மறுக்கப்படுகின்றன என்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அருள்தந்தை Mukundev Boloiarsingh
கூறினார்.HIV/AIDS நோய் கண்டவர்களின் எண்ணிக்கை தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற
தெற்கு மாநிலங்களிலும், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்குப் பகுதிகளிலும் அதிகம்
உள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.