இலங்கையின் தமிழ் விதவைத் தாய்கள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்
அக்.18,2010. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக இலங்கையின் தமிழ் விதவைத் தாய்கள்
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் ஆபத்தான வேலையில் தங்களை ஈடுபடுத்தி பொருள் ஈட்டி வருவதாக
கவலையை வெளியிட்டுள்ளார் யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் குரு Arulanandam
Johanly Yavis.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் எவ்விதச் சிறப்புப் பயிற்சியும்
பெறாத இவர்கள், தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான பணத்திற்காக மட்டுமே இவ்வாபத்து
நிறைந்தத் தொழிலை ஏற்றுள்ளதாகக் கூறிய குரு, இவர்கள் போரில் தங்கள் கணவர்களை இழந்தவர்கள்
என்றார்.
இந்த ஆபத்தான தொழில் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட மன்னார் காரித்தாஸ்
அமைப்பின் இயக்குனர் Santhia Joyce Peppi Soosai, உடை தயாரிக்கும் தொழில், மற்றும் விவசாயம்
தொடர்புடைய தொழில்களை ஊக்குவித்து, கைம்பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டுமேயொழிய,
நிலக்கண்ணி வெடி அகற்றும் ஆபத்தான தொழில் வழி அல்ல எனத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.