மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றம் குறித்த கண்காட்சி
அக்.13,2010 வத்திக்கானில் தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு
ஆயர் மாமன்றத்தையொட்டி, பல்வேறு தொடர்புசாதன கண்காட்சி ஒன்று துவக்கப்பட்டுள்ளது. "Abana:
Our Father" என்றழைக்கப்படும் இக்கண்காட்சியில் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள பல கத்தோலிக்க,
கிறிஸ்தவ சபைகள், அமைப்புக்கள் குறித்த பல தகவல்களைக் காணலாம் என்று செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது. இருள் சூழ்ந்த ஓர் அறையில் சிறு விளக்கு எப்படி அந்த இருளை வெல்லுமோ, அதேபோல்,
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும்,
அவர்கள் வழியே அச்சமூகம் ஒளி பெற முடியும் என்று இக்கண்காட்சியின் துவக்க விழாவில் உரையாற்றினார்,
ஆயர் மாமன்றத்தின் செயலர் பேராயர் நிக்கோலா எதேரோவிச் (Nikola Eterovic). முழு நேர
தியானத்தில் ஈடுபடும் துறவு மடங்கள் இப்பகுதியில் 14 உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டி
பேசிய எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் முதல்வர் பேராயர் Fouad Twal மத்திய கிழக்குப்
பகுதியில் உரையாடல்கள் தாம் பெறும் சவால் என்றும், செபங்களின் மூலம் இச்சவாலை சந்திக்க
முடியும் என்றும் கூறினார்.சைப்ரசுக்கு திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணத்துடன் ஆரம்பமான
ஒரு புதிய பயணத்தின் மற்றுமொரு மைல்கல் இந்த மாமன்றம் என்று வத்திக்கான் செய்தித்துறை
அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை ஃபெதேரிக்கோ லொம்பார்தி கூறினார்.