2010-10-11 16:58:14

இலங்கைத் தமிழர்களை மீள்குடியமர்த்த கருணாநிதி கோரிக்கை


அக்.11,2010. இலங்கையில், இன்னும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் தமிழர்களை உடனடியாக மீள்குடியமர்த்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சனிக்கிழமை பிற்பகல் விமானம் மூலம் சென்னை சென்ற சோனியா காந்தியை கருணாநிதி வரவேற்றார். அப்போது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதுதொடர்பாக, சோனியா காந்தியிடம் மனு ஒன்றையும் கொடுத்தார்.

இலங்கை முகாம்களில் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் அது தனக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து கவலையளிப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என வெளியுறவுச் செயலரே குறிப்பிட்டிருக்கும் நிலையில், உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.