அக்.05,2010. அடுத்த ஆண்டு மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கு ஸ்பெயின்
அரசு கொடுத்து வரும் ஒத்துழைப்பு குறித்துத் திருப்பீடமும் தலத்திருச்சபையும் திருப்தி
அடைந்திருப்பதாக இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.
2011ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல்
21 வரை நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம் குறித்து இச்செவ்வாயன்று வத்திக்கானில் நிருபர்
கூட்டத்தில் பேசிய மத்ரித் கர்தினால் அந்தோணியோ ரோக்கோ வரேலா, இந்நிகழ்ச்சிக்குப் பொது
மக்கள் காட்டும் ஆர்வம் பாராட்டும் படியாக இருக்கின்றது என்றார்.
மேலும், இந்நிருபர்
கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ,
இந்த உலக தினம் தொடங்கப்பட்ட 1985ம் ஆண்டுக்குப் பின்னர் இளையோரில் இது ஏற்படுத்தி வரும்
மௌனப் புரட்சி குறித்து விளக்கினார்.
மத்ரித் விழாவில் பங்கு கொள்வதற்கு இதுவரை
ஒரு இலட்சத்து எழுபதாயிரம் இளையோர் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர், எனினும் ஆறு இலட்சம்
பேர் வலைத்தளம் மூலம் பெயர்களைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்
கர்தினால் ரில்கோ தெரிவித்தார்.