பாஹாய் (Bahai) மதத்தில் தண்ணீர் பற்றி கூறப்பட்டுள்ள ஓர் எண்ணம் இது: "அனைத்தும்
வல்லவரே தண்ணீர் தருபவர். மனிதரின் தாகம் தணிக்கவே தண்ணீர் என அவர் நிர்ணயித்துள்ளார்.
அவரது எண்ணங்களுக்கு மாறாக நாம் நடந்தால், தாகத்தால் தவிக்க வேண்டி வரும். அத்தாகத்தை
எந்தப் பெருங்கடலாலும் தீர்க்க முடியாது."
தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம்
பண்பாடு குறைகிறது. மறைகிறது. தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த
வியாபாரத்தால் தண்ணீர் 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது. தங்கத்தை அணிந்து
ஆடம்பரம் காட்டலாம். பெட்டிக்குள் பூட்டலாம். அல்லது, பிற வியாபாரங்கள் செய்யலாம்.
வேறு எதற்கும் தங்கம் பயன்படாது. அதை உண்ண முடியாது. பருக முடியாது. சுவாசிக்க முடியாது... தண்ணீரைத்
தங்கமாய் மாற்றும் முயற்சிகள் பெருகி வருகின்றன.தான் தொட்டதெல்லாம் தங்கமாக வேண்டும்
என்று ஆசைப்பட்ட அரசன் அனுபவித்தத் துயரங்களை நாம் மறந்து விட்டோமா?