2010-10-01 15:59:58

குடும்பம் மற்றும் மனித வாழ்வைப் பாதுகாப்பதற்காக உழைக்குமாறு ஐரோப்பிய ஆயர்களுக்குத் திருத்தந்தை வேண்டுகோள்


அக்.01,2010. குடும்பம் மற்றும் மனித வாழ்வைப் பாதுகாப்பதற்காகவும், கிறிஸ்தவர்கள் பாகுபாட்டுடனும் சகிப்பற்றதன்மையுடனும் நடத்தப்படுவதற்கு எதிராகவும் ஐரோப்பிய ஆயர்கள் உழைக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

குரோவேஷியாவின் சாக்ரெபில் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு இவ்வியாழனன்று தொடங்கியுள்ள நிறையமர்வு கூட்டத்திற்குத் தந்திச் செய்தி அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறு கேட்டுள்ளார்.

கிறிஸ்தவச் சமூகங்கள், பாகுபாடு, சகிப்பற்றதன்மை ஆகியவைகளினால் அச்சமின்றி வாழ்வதற்கு ஆயர்கள் எடுத்து வரும் முயற்சிகளைத் திருத்தந்தை அச்செய்தியில் ஊக்கப்படுத்தியும் பாராட்டியும் இருக்கிறார்.

இச்செய்தியைத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ளார். ஐரோப்பாவில் “மக்களின் பிறப்பு இறப்பு நிலையும் குடும்பமும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டம் இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.