அமெரிக்காவில் வறுமையில் வாழ்வோரை மீட்கும் முயற்சிகளில் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள்
செப்.30,2010. அமெரிக்காவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோரை வறுமையிலிருந்து மீட்கும்
முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென, அமெரிக்கக் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின்
தலைவர்கள் இச்செவ்வாயன்று அமெரிக்க அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். ‘பலருக்கும்
வாய்ப்புக்கள் மற்றும் சமுதாயக் குழுக்களின் மறுமலர்ச்சி’ என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த
அனைத்து அரசு பிரதிநிதிகளின் ஆதரவையும் கோரி, இச்செவ்வாயன்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளைச்
சார்ந்த 700க்கும் மேற்பட்ட தலைவர்கள் அரசின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். இந்தச்
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், அமெரிக்காவில் வறுமையில் வாடும் பல கோடி மக்களுக்கு
புதிய நம்பிக்கையை ஊட்டுவதாகவும், அவர்கள் வறுமையில் வாழ்வதை அவர்களது விதி என்று கருதாமல்
இருக்கவுமே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதென்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளின் தலைவர்
அருள்தந்தை Larry Snyder கூறினார்.அமெரிக்காவில் கடந்த சனிக் கிழமை முதல் இச்செவ்வாய்
வரை நடந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள் மாநாட்டின் இறுதியில் அக்கூட்டத்தில் கலந்து
கொண்ட தலைவர்கள் அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.