திருமணத் தயாரிப்புக்கானப் புதிய கையேட்டை 2012ல் வெளியிட வத்திக்கான் திட்டம்
செப்.25,2010. உலகின் எல்லா மறைமாவட்டங்களிலும் இடம் பெற்று வரும் திருமணத் தயாரிப்பு
நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கத்தில் வழிகாட்டி ஏடு ஒன்றை வெளியிடுவதற்குத் திருப்பீட
குடும்ப அவை திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலானில் 2012ல்
நடைபெறவிருக்கின்ற உலகக் குடும்பங்கள் மாநாட்டிற்கானத் தயாரிப்புகள் குறித்து இவ்வெள்ளியன்று
நிருபர் கூட்டத்தில் விளக்கிய இத்திருப்பீட அவையின் செயலர் ஆயர் Jean Laffitte இந்தப்
புதிய திருமணத் தயாரிப்பு ஏடு பற்றி அறிவித்தார். உலகெங்கும் திருமணத் தயாரிப்புக்களில்
ஈடுபட்டுள்ள திருச்சபைப் பணியாளர்கள் இத்தகைய வழிகாட்டி ஏடு ஒன்றின் தேவை குறித்து வலியுறுத்தி
வருவதாகவும் ஆயர் Laffitte கூறினார். திருப்பீட குடும்ப அவை இத்தகைய ஏடு ஒன்றை 15
ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தாலும், 2012ல் வெளியாக இருக்கின்ற புதிய ஏடு மேய்ப்புப்பணியை
மையமாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஏழாவது உலகக் குடும்பங்கள் மாநாடு
மிலானில் 2012ம் ஆண்டு மே 30 முதல் ஜூன் 3 வரை நடைபெறும். இதற்கு முந்தைய மாநாடு மெக்சிகோ
நகரில் 2009ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது.