அகில உலக அமைதி நாளையொட்டி ஒரிஸ்ஸாவில் பல்சமய ஒருங்கிணைப்பு முயற்சிகள்
செப்.22, 2010. ஒரிஸ்ஸாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை பல்சமய உரையாடலிலும், ஒற்றுமையை
வளர்ப்பதிலும் இன்னும் தீவிரமாக ஈடுபடும் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறியுள்ளார். இச்செவ்வாயன்று
கடைபிடிக்கப்பட்ட அகில உலக அமைதி நாளையொட்டி, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த
கட்டக் புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ரபேல் சீனத் இவ்வாறு கூறினார். கந்தமால்
பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக அப்பகுதியில் வாழும் பலர் இன்னும் அச்சத்தோடும்,
சந்தேகத்தோடும் வாழ்வதால், அப்பகுதிகளில் அனைத்து மதங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களில்
தலைமைத்துவ பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென பேராயர் கூறினார்.அனைத்துலக அமைதி நாளையொட்டி,
கந்தமால் பகுதியில் பல பங்கு தளங்களில் அனைத்து மதங்களைச் சார்ந்த இளையோரையும் ஒருங்கிணைத்து
விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதென ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.