திருத்தந்தை – முத்திப்பேறு பெற்ற கர்தினால் நியுமனின் விசுவாசத்திற்கும் அறிவுக்குமிடையேயான
தொடர்பு குறித்த கருத்துக்கள் பலருக்கு உள்தூண்டுதல்களாக அமைந்துள்ளன
செப்.19,2010. இஞ்ஞாயிறன்று பிரிட்டன் சண்டையின் எழுபதாம் ஆண்டு நினைவுகூரப்படுகிறது.
ஜெர்மனியின் நாத்சி அரசின் இருண்ட நாட்களில் வாழ்ந்து துன்பங்களை அனுபவித்த நான் அதே
தீயக் கோட்பாடுகளினால் இங்கு உயிரிழந்த பலரை நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களுக்கு
மரியாதை செலுத்துகிறேன். இதே நினைவு நாளில் கர்தினால் ஜான் ஹென்றி நியுமன் முத்திப்பேறு
பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதயம் இதயத்திற்குப் பேசுகின்றது என்ற விருதுவாக்கைக்
கொண்ட கர்தினால் நியுமன், கிறிஸ்தவ வாழ்வு தூய்மைக்கான ஓர் அழைப்பு என்பதை புரிய வைக்கிறார்.
செபத்தில் பற்றுறுதியோடு இருப்பது நம்மை இறைச்சாயலாக மாற்றுகிறது என்பதையும் நினைவுபடுத்துகிறார்.
எவரும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்ற இஞ்ஞாயிறு நற்செய்திப் பகுதி நம்
அன்றாட வாழ்வுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள உதவுகிறார்.
மேலும், விசுவாசத்திற்கும்
அறிவுக்குமிடையேயான தொடர்பு, பண்பட்ட சமுதாயத்தில் வெளிப்படுத்தப்பட்ட மதத்தின் முக்கிய
பங்கு குறித்த நியுமனின் உள்தூண்டுதல்கள் மற்றும் கல்வி குறித்த அவரின் பரந்துபட்ட கண்ணோட்டம்
இங்கிலாந்துக்கு மட்டுமல்லாமல் உலகில் பலருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
கல்விப்பணி மற்றும் மறைக்கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரும் தங்களது பணியில் மேலும்
தூண்டுதல் பெற முத்திப்பேறு பெற்ற நியுமனின் பரிந்துரையை வேண்டுகிறேன். இவர் தமது குருத்துவப்
பணியையும் திறம்படச் செய்தவர். 120 ஆண்டுகளுக்குப் பின்னர் மாபெரும் கூட்டம் கூடி இந்நாட்டில்
மிகவும் அன்பு செய்யப்பட்ட தந்தையாம் இவரைப் போற்றுகின்றது. விண்ணகத் தூதர் இசைக் குழு
இவரை இன்று பாடிக் கொண்டிருக்கின்றது.