இரத்தம் மற்றும் உடல் உறுப்புகளின் தானம் குறித்து கொரிய கத்தோலிக்கத் திருச்சபையின்
விழிப்புணர்வு முயற்சிகள்
செப்டம்பர் 16, 2010 இரத்தம் மற்றும் உடல் உறுப்புகளின் தானம் குறித்த விழிப்புணர்வை
கொரிய கத்தோலிக்கத் திருச்சபையின் மறைமாவட்டம் ஒன்று முழு வீச்சில் செய்து வருகிறது. தென்
கொரியாவில் உள்ள Daejeon மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க போது நிலையினர் பணிக் குழு
2009ம் ஆண்டில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு பணி இம்மாதம் இறுதி ஞாயிறான 26 நிறைவடையும். கடந்த
ஒராண்டளவாய் நடைபெறும் இம்முயற்சியில் இக்குழுவினர் ஒவ்வொரு பங்கிற்கும் ஞாயிற்றுக் கிழமைகளில்
சென்று ஒளி ஒலி குறுந்தகடுகள், மற்றும் பத்திரிக்கைகள், விளம்பரத் தாள்கள் வழியே இரத்தம்
மற்றும் உடல் உறுப்புகளின் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். Daejeon
மறைமாவட்டத்தில் பல மறைசாட்சிகளின் திருத்தலங்கள் உள்ளதாகவும், இது போன்ற தானங்களில்
வெளிப்படும் தியாகத்திற்கு இந்த மறை சாட்சிகள் நல்ல முன்னுதாரணங்கள் எனவும் இப்பணிக்
குழுவின் செயலர் Natalia Park Nam -hee கூறினார்.இது வரை இந்த விழிப்புணர்வு முகாம்கள்
வழியே 500 பேருக்கும் மேல் இரத்த தானம் செய்துள்ளனர் என்றும், 5000க்கும் அதிகமானோர்
உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறுதி அளித்துள்ளனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.