இந்தியத் திருச்சபை வெளியிட்ட ‘திருச்சபையும் மில்லேன்னிய வளர்ச்சி
திட்டங்களும்’ என்ற கையேடு
செப்டம்பர் 16, 2010 ‘திருச்சபையும் மில்லேன்னிய வளர்ச்சி திட்டங்களும்’ என்ற கையேட்டினை
இப்புதனன்று இந்தியத் திருச்சபை வெளியிட்டது. புது டில்லியில் உள்ள இந்திய ஆயர் பேரவை
மையத்தில் இப்புதனன்று இந்திய ஆயர் பேரவை அமைதி மற்றும் நீதிப் பணிக்குழுவின் தலைவர்
ஆயர் யுவான் அம்ப்ரோஸ் இந்தக் கையேட்டினை வெளியிட, அதன் முதல் பிரதியை இந்திய ஆயர் பேரவையின்
பொதுச் செயலர் பேராயர் அல்பர்ட் டிசூசா பெற்றுக் கொண்டார். திருச்சபையிலும், உலகிலும்
அடிமட்டக் குழுக்களுடன் பணி புரிவோருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கையேடு, ஏழைகள்
மற்றும் ஒதுக்கப்பட்டோரின் வாழ்வை வலுப்படுத்தும் பல வழிகளை எடுத்துரைக்கிறது என்று இக்கையேட்டினை
வெளியிட்ட ஆயர் அம்ப்ரோஸ் கூறினார். இந்திய ஆயர் பேரவை அமைதி மற்றும் நீதிப் பணிக்
குழுவின் செயலர் அருள்தந்தை நித்யாவும், சமுதாய நீதிப் பணி அதிகாரி திரு அன்டனி அருள்ராசும்
இக்கையேட்டினை தொகுத்துள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. திருச்சபையின்
தலையாய இலக்காக விளங்குவது ஏழைகள் என்ற அறைகூவல் விடுக்கும் ஒரு நூல் இதுவென்று அருள்தந்தை
நித்தியா கூறினார்.