2007ம் ஆண்டு ஐ.நா. பொதுஅவை செப்டம்பர் 15ம் தேதியை அனைத்துலக மக்களாட்சி நாளாக அறிவித்தது.
அந்நேரத்தில் ஐ.நா.அவை வெளியிட்ட அறிக்கையொன்றில் நாம் காணும் சில கருத்துக்கள் இவை: "உலகின்
பல நாடுகள் மக்களாட்சி முறையைப் பின்பற்றினாலும், மக்களாட்சியின் எடுத்துக்காட்டென்று
எந்த ஒரு நாட்டின் முறையையும் கூற முடியாது. அரசியல், பொருளாதார, கலாச்சாரத் துறைகளில்
மக்களின் சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்துவதும், இவைகளில் மக்களின் முழு பங்கேற்பு
இருப்பதுமே மக்களாட்சியின் அடிப்படை." மக்களாட்சி என்றதும், ஆபிரகாம் லிங்கன் பல
நூறு ஆண்டுகளுக்கு முன் சொன்னது இன்னும் பலரது மனங்களில் ஒலிக்கும்... “Democracy is
the government of the people, by the people, for the people.” மக்களுக்காக, மக்களால்,
மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி, என்று கூறிச் சென்றார் அவர். ஆபிரகாம்
லிங்கன் சொன்ன பல உன்னதமான கூற்றுகள் காணக் கிடக்கின்றன. மக்களாட்சி என்ற பெயரில் இன்று
நாம் காணும் பல நாட்டு அரசு முறைகளைப் பார்க்கும் போது, ஆபிரகாம் லிங்கன் கூறிய ஒரு கூற்று
மனதில் ஓங்கி ஒலிக்கிறது:
எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ
ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும்,
எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.
You may
fool all the people some of the time, you can even fool some of the people all of
the time, but you cannot fool all of the people all the time.