2010-09-09 15:19:02

திருத்தந்தையின் இங்கிலாந்து பயணத்தை எதிர்ப்பவர்களுடன் பேராயர் சந்திப்பு


செப்.09, 2010 திருத்தந்தையின் இங்கிலாந்து பயணத்திற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வரும் குழுவைப் பேராயர் பீட்டர் ஸ்மித் இப்புதனன்று சந்தித்துப் பேசினார்.
குருக்களின் பாலியல் வன்முறைகளால் உருவான பிரச்சனைகள் குறித்து திருச்சபையும், திருத்தந்தையும் அமைதி காத்து வந்ததாகச் செய்திகள் வந்தபோது, இந்த எதிர்ப்பு குழு உருவானது. இந்தக் குழுவினர் திருத்தந்தையின் திருப்பயணத்தின் போது பிரச்சனைகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதைக் கணனியில் Facebook வழியாக கூறி வந்தனர்.
திருத்தந்தையின் திருப்பயணத்தின் போது, எந்த பிரச்சனையும் எழக்கூடாதென்பதில் ஆர்வம் கொண்டுள்ள காவல்துறையினர் தலத்திருச்சபைக்கும் இக்குழுவுக்கும் இடையே இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சந்திப்பில் அனைவரும் மனம் திறந்து பேசியதாகவும், இக்குழுவினர் எடுத்துரைத்தக் கவலைகளை ஆயர்களிடம் தான் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் இந்தச் சந்திப்பிற்குப் பின் நிருபர்களிடம் பேசிய பேராயர் பீட்டர் ஸ்மித் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.