ஏழ்மையான கிராமங்களில் மருத்துவப் பணி புரிவதே மன நிறைவை அளிக்கிறது - அருள் சகோதரிகள்
செப்.02,2010. இந்தியாவின் பெரும் மருத்துவமனைகளில் பணி புரிவதை விட, மிக ஏழ்மையான கிராமங்களில்
மருத்துவப் பணி புரிவதே மன நிறைவை அளிக்கிறதென அருள் சகோதரிகள் கூறியுள்ளனர்.
‘மருத்துவப்
பணிக்கான அருள் சகோதரிகள்’ (Medical Mission Sisters) என்ற துறவற சபையைச் சார்ந்த சகோதரிகள்,
கடந்த முப்பது ஆண்டுகளாக மத்திய இந்தியப் பகுதிகளில் கிராமத்து ஏழைகள் மத்தியில் பணி
புரிந்து வருகின்றனர்.
இந்தச் சகோதரிகளில் ஒருவரான அருள் சகோதரி அகஸ்தின், கடந்த
பத்து ஆண்டுகளாக ஏழைகள் மத்தியில், அதிலும் சிறப்பாக 'தீண்டத்தகாதவர்கள்' என்று ஒதுக்கப்பட்ட
தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் உழைத்து வருவது தனக்கு பெரும் மன நிறைவை அளிக்கிறதென்று
கூறியுள்ளார்.
1967ம் ஆண்டு இந்தத் துறவறச் சபையினர் நடத்திய ஒரு கூட்டத்திற்குப்
பின் கிராமப் புறங்களில் பணி செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டதென்றும், இதன்படி, தற்போது
இவர்கள் 56 கிராமங்களில் 135 சுய உதவி குழுக்களை உருவாக்கிப் பணி செய்து வருகின்றனர்
என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.