அரசர் ஒருவர் சாலையின் நடுவே பாறை ஒன்றை வைக்கக் கட்டளையிட்டார். மறைவிலிருந்து என்ன
நடக்கிறதென்று பார்த்தார். பலரும் அந்தப் பாறை இருந்த இடத்திற்கு வந்ததும், ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கிச் சென்றனர். ஒரு சிலர், சாலைகளைப் பராமரிக்கத் தெரியாத அரசனைக் குறை கூறிய வண்ணம்
ஒதுங்கிச் சென்றனர். அவ்வழியே ஒரு தொழிலாளி தலையில் ஒரு மூட்டையைச் சுமந்து வந்தார்.
அவர் பாறையைக் கண்டதும், மூட்டையை இறக்கி வைத்து விட்டு, மிகுந்த முயற்சி செய்து, அந்தப்
பாறையை அகற்றி, சாலை ஓரமாய் வைத்தார். மீண்டும் தன் மூட்டையை எடுக்க வந்தவருக்கு ஆச்சரியம்.
அந்தப் பாறை இருந்த இடத்தில் சிறியதொரு துணிப்பை இருந்தது. பாறைக்கடியில் வைக்கப்பட்டிருந்த
பை அது. தொழிலாளி அதைத் திறந்து பார்த்தார். பைக்குள் தங்க நாணயங்கள் இருந்தன. அத்துடன்
அரசன் ஒரு குறிப்பும் எழுதி வைத்திருந்தார். "பாறையை யார் அப்புறப்படுத்துகிறார்களோ,
அவர்களுக்கு என் பரிசு." என்று இருந்தது அந்தக் குறிப்பு. தடைகளை நீக்கும் போது,
வாய்ப்புகள் வலிய வந்து மடியில் விழும். புதியதொரு மாதத்தைத் துவக்கியுள்ளோம். தடைகளை
நீக்கி, வாய்ப்புகளுக்கு வழி வகுப்போம்.