இந்தியத் தலைவர்கள் அன்னைத் தெரேசாவுக்குச் செலுத்திய புகழாரங்கள்
ஆகஸ்ட் 30, 2010. இந்தியாவின் அரசுத் தலைவர் பிரதிபா படில் உட்பட, பல இந்தியத் தலைவர்கள்
அன்னைத் தெரேசாவைக் குறித்து பல புகழாரங்களைச் செலுத்தியுள்ளனர்.
நாம் வாழும்
காலத்தில் மிக உன்னதமான ஒரு மனிதராக வாழ்ந்த அன்னை தெரேசா, தன்னலத்தை முற்றிலும் துறந்தவராய்,
அன்பு, பரிவு இவைகளைத் தன் பணியில் வெளிப்படுத்தினார் என்று இந்திய அரசுத் தலைவர் பிரதிபா
படில் புது டில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கூறினார்.
உத்திராஞ்சல்
மாநிலத்தின் ஆளுநராக உள்ள கத்தோலிக்கரான மார்கரெட் ஆல்வா பேசுகையில், அன்னையுடன் தனது
அனுபவங்களை எடுத்துரைத்து, அன்னை தெரேசா கடவுளுக்குத் தன்னையே அர்ப்பணித்தவர் ஆயினும்,
மனித குலத்தின் மீது தணியாத அன்பு கொண்டிருந்தார் என்று கூறினார்.
அன்னை தன் வாழ்வாலும்,
படிப்பினைகளாலும் தன்னைச் சூழ்ந்திருந்த அனைவரையும் நல்வழிப்படுத்தினார் என்று இந்தியாவின்
அயல்நாட்டுப் பணிகளுக்கான துணை அமைச்சர் வயலார் ரவி கூறினார்.