போபால் உயர்மறைமாவட்டம் கிறிஸ்தவ மறைசாட்சிகளை நினைவுகூருகின்றது
ஆக.28,2010. மேலும், போபால் உயர்மறைமாவட்டம் “கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாளை” இஞ்ஞாயிறன்று
கடைபிடிக்கிறது.
போபால் உயர்மறைமாவட்டம், ஆகஸ்ட் இறுதி ஞாயிறை கிறிஸ்தவ மறைசாட்சிகள்
நாளாகக் கடைபிடிப்பதற்குத் தீர்மானித்திருப்பதை முன்னிட்டு அவ்வுயர் மறைமாவட்டத்தின்
எல்லாக் குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலைத் தலைவர்களுக்கு இஞ்ஞாயிறு குறித்து அலைபேசி
வழி செய்தி அனுப்பியுள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.
ஒரிசா மாநிலத்தில்
2008ம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறையில் சுமார் நூறு பேர்
கொல்லப்பட்டதையடுத்து மத்திய பிரதேச கிறிஸ்தவ கூட்டமைப்பான “இசை மஹாசங்”, கிறிஸ்தவ மறைசாட்சிகள்
நாள் அனுசரிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை முன்வைத்தது. இதனை ஏற்று மத்திய பிரதேச தலத்திருச்சபை
இந்நாளைக் கடைபிடிக்கிறது.
மேலும், விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்களின் குருதி
ஒருபொழுதும் வீணாகாமல் இருக்கும் வகையில் இந்தியா எங்கும் இந்நாள் விரைவில் கடைபிடிக்கப்படும்
என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் இசை மஹாசங் ஒருங்கிணைப்பாளர் அருள்திரு ஆனந்த்
முட்டுங்கல்.