ஆக.28,2010. இந்தியாவில் கிறிஸ்துவுக்காகக் கொல்லப்பட்ட எல்லாரையும் நாட்டின் எல்லாக்
கிறிஸ்தவர்களும் நினைவுகூருமாறு ஜலந்தர் ஆயரும் இந்திய ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்புப்
பணிக்குழுவின் தலைவருமான ஆயர் அனில் கூட்டோ (Anil Cuto) கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு
மறைசாட்சிகளை நினைவுகூருவது, நாட்டில் திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த
வேண்டுகோளை முன்வைப்பதாகக் கூறியுள்ளார் ஆயர் கூட்டோ.
இந்தவொரு நோக்கத்திற்காக
இந்தியாவின் எல்லாக் கிறிஸ்தவ சபைகளுடனும் சேர்ந்து ஆகஸ்ட் 29ம் தேதியை “இந்தியக் கிறிஸ்தவ
மறைசாட்சிகள் நாள்” என அறிவித்திருப்பதாகவும் உரைத்தார் ஆயர் கூட்டோ.
இவ்வாறு
அனுசரிப்பதன் மூலம் அவர்களில் யாரையும் புனிதராக அறிவிக்கும் நோக்கம் இல்லை, ஆனால், விசுவாசத்திற்காக
இறந்தவர்களின் நினைவை என்றும் காக்கும் நோக்கத்தைக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறைசாட்சிகளின்
இந்த நினைவு வருங்காலத் தலைமுறைகளுக்குத் தூண்டுதலின் ஊற்றாக இருக்கும் என்றும் ஜலந்தர்
ஆயர் கூட்டோ கூறியுள்ளார்