திருத்தந்தை எழுதியுள்ள ‘நாசரேத்தின் இயேசு - இரண்டாம்
பாகம்’ மார்ச் 13 அன்று வெளியிடப்படும்
ஆகஸ்ட் 26, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதியுள்ள ‘நாசரேத்தின் இயேசு - இரண்டாம்
பாகம்’ எனும் புத்தகம் வருகிற தவக்கால முதல் ஞாயிறான மார்ச் 13 அன்று வெளியிடப்படும். இயேசு
கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்து எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் தற்போது பல்வேறு மொழிகளில்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது எனவும், அனைத்து மொழி பெயர்ப்புகளும் சனவரி 15ம்
தேதியையொட்டி முடிக்கப்பட்டு பதிப்பாளர்களை அடையும் எனவும் வத்திக்கான் புத்தக வெளியீட்டகத்தின்
தலைவரான Giuseppe Costa வத்திக்கான் வானொலிக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியொன்றில்
கூறினார். திருத்தந்தை எழுதியுள்ள இந்த புத்தகத்தை வெளியிட 18 பதிப்பகங்கள் இதுவரை
முன் வந்துள்ளன என்றும், இன்னும் பிற பதிப்பகங்கள் முன் வரக்கூடும் என்றும் Giuseppe
Costa மேலும் கூறினார். இதற்கிடையே, தற்போது திருத்தந்தையர்களின் கோடை இல்லமான காஸ்தல்
கந்தோல்ஃபோவில் விடுமுறை எடுத்து வரும் திருத்தந்தை, நாசரேத்தின் இயேசு மூன்றாம் பாகம்
என்ற இறுதிப் பாகத்தை எழுதி வருவதாக திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் இயேசுசபை
குரு லோம்பார்தி அண்மையில் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.