2010-08-21 15:50:47

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
கடவுளின் குணங்களை விளக்கப் பல கதைகள் சொல்லப்படும். ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட குணத்தை வலியுறுத்தும். அப்படி ஒரு கதை இது. கடவுள் விண்ணகத்தில் தன் மாமன்றத்திற்கு வந்தார். மாமன்றம் மக்களால் நிறைந்து வழிந்தது. கூட்டம் அலைமோதியது. உலகில் இருந்த அனைவரும் அங்கிருந்ததைப் போல் இருந்தது. அந்தக் கூட்டத்தைக் கண்ட இறைவன், வானதூதரிடம் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகையை எடுத்து வரச் சொன்னார். வானதூதர் கொண்டு வந்தார். அந்தக் கட்டளைகளை ஒவ்வொன்றாக வாசிக்கச் சொன்னார். "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது." (விடுதலைப் பயணம் 20 : 2-3) என்ற முதல் கட்டளையை வானதூதர் வாசித்தார். அந்தக் கட்டளையை மீறியவர்கள் மாமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பலர் வெளியேற வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு கட்டளையும் வாசிக்கப்பட்டது. அந்தக் கட்டளையை மீறிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். இறுதி கட்டளை வருவதற்குள், மாமன்றம் ஏறத்தாழ காலியாகி விட்டது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.
கடவுள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அவர் அந்த மாமன்றத்திற்குள் வந்த போது இருந்த அந்த கட்டுக்கடங்காத கூட்டம், அங்கு ஒலித்த ஆரவாரம் இவற்றிற்கும், இப்போது ஒரு சிலரே நின்று செபித்துக் கொண்டிருந்த இந்த அமைதிக்கும் இருந்த வேறுபாடு அவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க வைத்தது. பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்தோடு, கடவுள் வானதூதரிடம் திரும்பி, "வெளியில் அனுப்பப்பட்ட அனைவரையும் உள்ளே வரச் சொல்." என்றார். மீண்டும் மாமன்றம் நிறைந்தது, மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. கடவுளும் மகிழ்ந்தார்.

கதையாக, கற்பனையாக இப்படி கடவுளை நினைத்துப் பார்க்கலாம். சிரித்துக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் நம் கடவுள் இப்படி நடந்து கொள்வாரா? ம்... வந்து... 'ஆம்' என்று உடனடியாகப் பதில் சொல்ல நம்மில் பலருக்குத் தயக்கம் இருக்கும். ஆழ்ந்து சிந்தித்தால், கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கிய அம்சம் இதுவென்று புரியும். அனைவரையும் கூட்டிச் சேர்க்கும், அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்து கொடுக்கும் கடவுள் தான் நம் கடவுள். இன்றைய ஞாயிறுத் திருப்பலியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம் தரும் செய்தி இதுதான்.
எசாயா 66 : 18, 20
பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்... இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

அனைவரையும் இறைவன் எருசலேமிலுள்ள தன் திருமலைக்கு அழைத்து வருவார் என்று கூறும் எசாயாவின் இந்த வாசகத்தையும் தாண்டி, ஒரு படி மேலே சென்று, இயேசுவின் கூற்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஒலிக்கிறது.
லூக்கா நற்செய்தி 13 : 30
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

இறைவனின் திருமலைக்குச் சேர்ந்து வருவது மட்டுமல்ல, அந்த மலையில் அனைவருக்கும் சமபந்தியும் இருக்கும்.

அனைவரும், மீண்டும் சொல்கிறேன்... ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெற வேண்டும், மீட்பு பெற வேண்டும் என்பது மட்டுமே இறைவனின், இயேசுவின் விருப்பம். நிபந்தனையற்ற அன்பு என்று நாம் நம்பும், நாம் வணங்கும் கடவுளின் முக்கிய அம்சமே பாகுபாடுகள் இல்லாத சமத்துவம்.
நம்மில் சிலருக்கு, இந்த சமத்துவத்தை ஏற்பதற்கு அதிகத் தயக்கமாய் இருக்கும். பாவிகள், புண்ணியவான்கள் எல்லாருக்கும் மீட்பு உண்டு. இறையரசில் அவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இருக்காது என்பது மனித, உலக அளவுகோல்களை உடைத்தெறியும் ஒரு சவால்.
“யூதர்கள், புற இனத்தார் அனைவருக்கும் மீட்பு உண்டு” என்ற அந்த எண்ணத்தை யூதர்களால், இஸ்ராயலர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாதாரண, எளிய இஸ்ராயலர்கள் ஏற்றுக் கொண்டாலும், அவர்களது மதத் தலைவர்களால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தாங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து தனித்து பிரிக்கப்பட்டு, மீட்கப்பட்ட குலம்... அப்படியிருக்க, சமாரியர், வரி வசூலிப்பவர், ஆயக்காரர், தொழு நோயாளிகள் என்று பிறரோடு ஒரே மலையில், ஒரே மன்றத்தில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? நடக்கவே நடக்காது. இஸ்ராயலரின் கடவுள் இப்படி செய்யமாட்டார் என்பது இம்மதத்தலைவர்களின் அசைக்க முடியாத எண்ணம்.
எப்படி எல்லாரும் மீட்பு பெற முடியும்?
ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்வதற்குக் கடினமான அந்தக் கேள்வியை இன்று ஒருவர் இயேசுவிடம் சிறிது வித்தியாசமாகக் கேட்கிறார். இந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
லூக்கா 13 : 22 - 23
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். 
"எல்லாருக்கும் மீட்பு கிடைக்குமா?" என்று கேட்க விழைந்தார் அந்த மனிதர். ஆனால், "மீட்பு ஒரு சிலருக்கு மட்டும் தான்." என்று மதத் தலைவர்கள் மீண்டும், மீண்டும் ஊதிய அந்தச் சங்கின் ஓசை இந்த மனிதரின் மனதைச் செவிடாக்கியிருக்க வேண்டும். எனவே, அவர் இயேசுவிடம், "மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார்.
இயேசு இந்தக் கேள்விக்கானப் பதிலை இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார். எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா மக்களும் இறையரசின் விருந்தில் பங்கு கொள்வர் என்பது இயேசுவின் பதில். ஆனால், இயேசு இந்தப் பதிலை உடனே சொல்லாமல், முதலில் மீட்புப் பெறுவது எவ்வாறு என்ற பாடத்தை, ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார்.

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்." (லூக்கா 13 : 24)

இடுக்கமான வாயில் வழியே பலர் உள்ளே செல்ல முடியாமல் போகலாம் என்று இயேசு சொல்லும் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், அந்தக் கூற்று, யூதமதத் தலைவர்கள் சொல்லி வந்த "ஒரு சிலருக்கே, அதுவும், இஸ்ராயலருக்கே மீட்பு உண்டு" என்ற கூற்றைப் போல் தெரியலாம். ஆனால், மதத் தலைவர்களின் எண்ணங்களுக்கும், இயேசுவின் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.

மதத் தலைவர்கள் இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, அதன் வழியாக, மீட்பையும் தங்கள் தனிப்பட்டச் சொத்து என்பது போல் நினைத்தனர், போதித்து வந்தனர். இயேசுவோ, இறைவன் எல்லாருக்கும் பொதுவான தந்தை என்றும், அவர் தரும் மீட்பு எல்லாருக்கும் கொடுக்கப்படும் பரிசு என்றும் கூறினார். இந்தப் பரிசை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ஆனால், இது குறுகலான, இடுக்கமான வாயில். முயற்சி செய்துதான் உள்ளே நுழைய முடியும். இவை இயேசுவின் எண்ணங்கள்.

இறையரசில் நுழைவது, விண்ணக விருந்தில் பங்கு கொள்வது மிகவும் பெருமைக்குரிய உயர்ந்த நிலைதான். ஆனால், அந்த நிலையை அடைய ஏற்கனவே நாம் அணிந்துள்ள எல்லாப் பெருமைகளையும் களைய வேண்டும். பெருமைகளைக் களைவது எளிதல்ல என்பதை இயேசு, "பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற் போகும்." என்று சுட்டிக் காட்டினார். அவர் இப்படிச் சொன்னபோது, அவர் மனதில் யூதமதக் குருக்களை அதிகம் எண்ணியிருப்பார். அவர்களை மனதில் வைத்து, தொடர்ந்து ஒரு கதையும் சொன்னார். அந்தக் கதையை நான் கொஞ்சம் விரிவாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.
மீட்பின் வாயில் வரை வந்துவிட்ட யூதமதக் குருக்கள் அந்தக் குறுகிய வாயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அணிந்திருந்த பெரும் ஆடைகள், அவர்கள் பெருமையை நிலை நிறுத்த தலையில் அணிந்திருந்த மகுடம் இவைகளுடன் கட்டாயம் அந்த வாயில் வழியே அவர்களால் சென்றிருக்க முடியாது. எனவே, என்ன செய்தனர்? மீட்பின் வாயிலில் நின்று கொண்டு, தங்கள் அருமை பெருமைகளையும், தாங்கள் அந்த வீட்டுக்கு உரிமையுடையவர்கள் என்பதையும் சப்தமாய் எடுத்துச் சொல்லி, வீட்டு உரிமையாளரை வெளியில் வரச் சொல்லி அழைத்தனர்.
அது மட்டுமல்ல, வெளியில் வரும் வீட்டு உரிமையாளரிடம் அந்த வாயிலை இன்னும் இடித்துப் பெரிதாக்க வேண்டுமென்று கூறுவதற்குக் காத்திருந்தனர். அப்படி அந்த வாயில் இடித்து பெரிதாக்கப்பட்டால்தான் தங்களது பட்டாடைகள், மகுடங்கள் இவை எதையும் கழற்றாமல் அவர்களால் போக முடியும். எனவே அந்தத் தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தனர். வீட்டு உரிமையாளர் வெளியில் வருவது போல் தெரியவில்லை. பொறுமையிழந்து, தங்கள் பெருமைகளை இன்னும் உரக்க எடுத்துரைத்த வண்ணம் நின்றிருந்தனர். இறுதியாக, உள்ளிருந்து பதில் வந்தது: "நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே." என்று.
அதிர்ச்சியில் வாயடைத்துப் போன மதத் தலைவர்கள் சுதாரித்துக் கொண்டு, தங்கள் அருமை, பெருமைகளை எல்லாம் மீண்டும் பட்டியலிட்டு முழங்கினர். அந்த வீட்டுத் தலைவனுடன் தாங்கள் உண்டது, குடித்தது, அவருடன் பழகிய நாட்கள், அவர் தங்களுக்குச் சொன்ன போதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். வீட்டுத் தலைவரின் பொறுமை அதிகம் சொதிக்கப்பட்டுவிட்டதால், "உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் தெரியாது." என்று கடூரமாகச் சொல்லி, அவர் அவர்களை அந்த இடத்தை விட்டுப் போக சொன்னார். வீட்டுத் தலைவர் வெளியில் வரவில்லை, தரிசனம் தரவில்லை. எல்லாம் குரலொலி மட்டும்தான்.
இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கு வந்த எளிய மக்கள், தங்கள் அருமை, பெருமை என்று எதையும் தங்களுடன் சுமந்து வராத எளிய மக்கள் அந்த மீட்பின் வாயில் வழியே எளிதாக, மகிழ்வாக உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். தங்களுக்குக் கோவில்களில் மீட்பைப் பற்றி எடுத்துரைத்த தங்கள் தலைவர்கள் இந்த வாயில் வழியே வரமுடியாமல் தவித்ததை வேடிக்கையாய் பார்த்தபடி அந்த மக்கள் சென்றது அந்தத் தலைவர்களின் வெந்துப் போயிருந்த நெஞ்சில் பாய்ந்த அம்புகளாய்த் தைத்தன. புலம்பலிலும், கோபத்திலும் மதத் தலைவர்கள் பற்களைக் கடித்துக் கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். இந்தக் கதையை இயேசு இப்படி முடிக்கிறார்.
லூக்கா நற்செய்தி 13 : 28ஆ-30
இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.அன்புள்ளங்களே, இந்தியாவில் விடுதலை நாளுக்குப் பின் வரும் இந்த ஞாயிறு நீதியின் ஞாயிறென்று கொண்டாடப்படுகிறது. எல்லாரையும் அழைக்கும், ஏற்று அணைக்கும், எல்லாருக்கும் சமபந்தியாக விருந்து படைக்கும் அன்புத் தந்தையாக இறைவனைப் பார்ப்பதும், அந்த விருந்தில் கலந்து கொள்ள நம் தற்பெருமைகளை எல்லாம் களைந்து விட்டு, அனைவரோடும் அந்தக் குறுகலான வாயில் வழியே நுழைந்து செல்வதும், அங்கு அந்த விருந்தில் அனைவரும் அ-னை-வ-ரு-ம் எந்த வித பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் கலந்து கொள்வதில் மனநிறைவு அடைவதும் தானே நீதி என்பதன் இலக்கணம்?







All the contents on this site are copyrighted ©.