2010-08-21 15:57:02

இந்தியாவின் வெள்ள நிவாரண நிதி உதவியை ஏற்கிறது பாகிஸ்தான்


ஆக.21,2010. பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அளிக்கும் வெள்ள நிவாரண நிதியான சுமார் 50 இலட்சம் டாலரை ஏற்றுக் கொள்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இவ்வுதவியை வரவேற்பதாகக் கூறினார் பாகிஸ்தானின் ஐ.நா.தூதர் அப்துல்லா ஹரூன்.

இந்தியாவின் இவ்வுதவி குறித்துப் பேசிய இந்தியாவின் ஐ.நா.தூதர் ஹர்தீப் சிங் பூரி, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் இவ்வுதவி தொடக்கநிலை உதவி எனவும் பாகிஸ்தான் விரும்பினால் இந்தியா மேலும் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இவ்வெள்ளியன்று வெளியான ஐ.நா. அறிக்கையின்படி பல நாடுகளிலிருந்து இதுவரை 49 கோடியே 7 இலட்சம் டாலர் நிவாராண உதவி பாகிஸ்தானுக்கென கிடைத்துள்ளது. மேலும் 32 கோடியே 50 இலட்சம் டாலர் உதவிக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.